தாயப் பதிகள் தலை சிறந்து எங்கெங்கும், * மாயத்தினால் மன்னி வீற்றிருந்து தான் உறை, * தேயத்து அமரர் திருக்கடித் தானத்துள், * ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே.
திருவாய்மொழி 8.6.9
தாய நகரங்களாகிய எல்லா இடங்களிலும் தனது விருப்பத்தினாலே நிலை பெற்று, உயர்வு தோன்ற எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமான், ஒளியோடு கூடிய நித்திய சூரிகள், வந்து தங்கி இருக்கின்ற திருக்கடித்தானத்தில் உறைகின்ற, ஆயர்க்கு அதிபதியான அற்புதனே ஆவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தாயப் பதிகள் எங்கெங்கும் மாயத்தினால் மன்னி தலை சிறந்து அற்புதன் தானே வீற்றிருந்தான் என்று கொள்ளலாம்.
எல்லா திருப்பதிகளும் அவனுக்கு அப்படியே இருந்தாலும், தான் கிடைப்பதற்கு காரணமாக இருந்த நிலம் திருக்கடித்தனாம் ஆகையால் அதன் மேல் மிக்க காதல் ஆனான் என்று ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.
மாயம் என்பது இங்கே ‘இச்சை’ அல்லது விருப்பம் என்ற பொருளில் வருகிறது. மன்னி என்பது தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோன்ற வீற்று இருந்தான் என்கிறார். மேலும் ஐஸ்வர்யத்தால் வந்த வேறுபாடு தோன்ற வீற்று இருந்தான் என்கிறார்.
தேயத்து அமரர் என்பது, ஒளி விளங்கும் நித்திய சூரிகள் அடையத்தக்க பூமியான திருக்கடிததானம் என்கிறார்.
உகந்து அருளின தேசங்கள் எல்லாவற்றிலும் விருப்பம் உண்டாகிலும், என்னைப் பெறுவதற்காக திருக்கடித்தானத்தில் தன் மேன்மையும் நேர்மையும் எல்லாம் பிரகாசிக்க நின்றான் என்கிறார்.
Leave a comment