தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்* தூமம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்* மாமான் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்* மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்* ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ* ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ* மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று* நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.
திருப்பாவை 9
கண்ணன் வந்த போது வருகிறான் என்று அநாதரித்து கிடக்கும் ஒருத்தியை இந்த பாடலில் எழுப்புகிறார்கள். இவள் நினைவு, தன்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டியதும் அவன் காரியம் ஆயிற்றே என்பது தான். வெளியே இருப்பவர்கள் இளைய பெருமாளை (லக்ஷ்மணன்) போலவும், முக்தி அடைந்தவர்கள் போலவும், உள்ளே இருப்பவள், நித்ய சித்தர் போலவும் உள்ள ஒருத்தியை எழுப்புகிறார்கள்.
பரிசுத்தமான மாணிக்கங்கள் பொருத்தப்பட்ட மாளிகையில் நான்கு புறமும் விளக்குகள் எரிய, வாசனை பொருட்கள் மணம் கமழவும் மென்மையான படுக்கையின் மீது நித்திரை செய்யும் மாமன் மகளே, மாணிக்க கதவினை திறப்பாயாக. மாமி உள்ளே உறங்குகிற உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களா? உங்கள் மகள் வாய் மற்றும் செவி அற்றவளா, பெருறக்கம் கொண்டவளாக இருப்பவளோ ? பெரிய படுக்கையில் காவல் இடப்பட்டு உள்ளாளோ? அல்லது மந்திரத்தால் கட்டப்பட்டு உள்ளாளோ ? எண்ணற்ற ஆச்சரியமான செய்கைகளை உடையவனே, திருமகள் கேள்வனே, வைகுந்த நாதனே, என்று பற்பல நாமங்களை சொல்லியும் உன் மகள் இன்னும் உணரல் ஆகாதா? என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சுற்றும் விளக்குகள் விளங்கப் பெற்றுத் தூபங்கள் மணம் வீச பெற்ற நன்மணி மாடத்தில் மெல்லணை மேல் கண் துயில்கின்ற மாமான் மகளை நோக்கி “மணிக்கதவம் தாள் திறவாய்” என்று வெளியே நிற்பவர்கள் சொல்கிறார்கள். அவள் அதனைக் கேட்டும் மறுமொழி ஒன்றும் கூறாதவளாய் இருக்கிறாள். அப்படி கிடப்பதைக் கண்ட அவள் தாயார் “இத்தனை பெண்பிள்ளைகள் வருந்தி வாசலிலே நின்று துவள, இவள் ஒரு பேச்சும் பேசாதே உறங்குவது என்ன நீதி!’ என்று நினைக்கிறாள்.
இந்த தாயின் நெஞ்சில் கொண்ட இரக்கம் முகத்திலே தோன்றும்படி இருப்பதை பார்த்த ஆச்சியர்கள், ‘மாமீர்! அவள் ஓருத்தி எங்கள் திரளில் சேராமையாலே நாங்கள் படும்பாட்டை பாருங்கள்; உமது மகளைச் சிறிது உணர்த்தல் ஆகாதா, நாங்கள் நெடு நேரமாக நின்று கூவும் போதும், இவள் மாற்றம் ஒன்றும் இல்லாமல் இருக்கிறாள்;
- இவள் ஊமையா,
- செவிடா,
- பெரிய உறக்கம் பிடித்தவளா, அன்றி
- இவள் எழுந்து இருக்கக் கூடாது என்று யாரேனும் படுக்கையில் காவலில் இடபட்டு இருக்கிறாளா அல்லது
- மந்திரத்தினால் ஸர்ப்பத்தைத் கட்டுவது போல், இவள் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதபடி யாரேனும் செய்து விட்டார்களா?
எங்களுக்கு என்ன என்று தெரியவில்லை என்று சொல்கிறார்கள். இதனைக் கேட்ட தாயார் ‘நீங்கள் அப்படி ஒன்றும் சந்தேகிக்க வேண்டாம். பகவான் நாமங்களை சொல்ல தொடங்கினீர்கள் ஆனால், அவள் தன்னடையே உணர்ந்து எழுந்து வருவாள்’ என்று சொல்ல, அப்படியே நாங்கள் பல பகவான் நாமங்கள் சொல்லியும், இன்னும் யாம் என்ன செய்யவேண்டும்’ என்கிறார்கள்.
தூமணி மாடம் என்ற அடைமொழியினால் இங்குள்ள மாடத்து மணிகள், பிறந்தது முதல் பரம பாவனங்களாய் எப்போதும் ஒரு பாவ சம்பந்தங்களும் இல்லாமல் இருந்தன.
முக்தர் என்பவர் சில நாள் ஸம்ஸாரத்தில் இருந்து பின்னர் அந்த பற்று நீக்கியவர் ஆவார். இது நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் துவளில் மாமணி (6.5.1) என்ற பாடலில், ‘துவள் இல்’ என்று சொல்லி, குற்றம் இல்லாத என்பதற்கு ஒப்பாகும். நித்தியர் என்பவர் என்றும் ஸம்ஸார ஸம்பந்தமே இல்லாமல், எப்போதும், பரவாஸுதேவனுக்கு கைங்கர்யம் செய்யும் அனந்த, கருட, விஷ்வக்ஸேநர்கள் ஆவார். இது இந்த பாடலில் சொன்ன தூ என்ற சொல்லுக்கு ஏற்றபடி ஒரு பாவ சம்பந்தமும் என்றும் இல்லாதபடி என்பதற்கு ஒப்பாகும்.
வெளியே நின்று துவள்கின்ற எங்கள் நெஞ்சு இருண்டு புகைய, உள்ளே சுற்றும் விளக்கெரியும்படியாகப் பெற்ற பாக்கியமே பாக்கியம் என்னும் வயிற்றெரிச்சல் தோன்றுவது இயல்பு. சுற்றும் விளக்கு எரிய என்பது மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது என்கிறார். கிருஷ்ணன் வந்தால் தன் கையை பிடித்து உலாவும் இடமும் படுக்கையும் நன்றாக தெரியும் படி உள்ளது என்கிறார்.
தூமணி மாடம் ஆகையாலே, உள்ளே எரிகிற விளக்கு வெளியே தெரிகிறது. அதனால் வெளியே நின்று ‘மணிக்கதவம் தாள் திறவாய்’ என்கிறவர்கள், உள்ளே எரிகிற விளக்கு எரிந்ததை தெரிந்து கொண்டார்கள்.
“தூபம் கமழ” என்ற சொல் நயத்தால், கண்ணுக்குப் புகையாகத் தோன்றுவது அன்று, பரிமளம் மிளிர இருப்பது என்று சொல்கிறது. சீருற்றவகில்புகை (திருவாய்மொழி 9.9.7) சொன்னது போல விரக தாபம் இல்லாதார்க்கு பரிமளம் பொறுக்காதே என்று சொல்கிறார்.
துயிலணை என்று சொல்வதால், படுத்துக் கொண்டவுடனே உறக்கத்துக்குப் பரவசமாக்கவல்ல மெத்தை என்பது தெரியும். இதனால், அப்படுக்கையின் மென்மை, குளிர்த்தி முதலிய குணங்கள் விளங்கும். நாங்கள் இங்கே இப்படி இருக்க, நீ துயிலணையில் கண்வளர்வது நமது நட்புக்கு பொருந்துமா என வெறுத்துக் கூறுகின்ற பாவம் விளங்கும்.
“துயிலணைமேல உறங்கும்” என்று சொல்லாமல், “கண்வளரும்” என்றது, பகவத் விஷயத்தை ஏற்று கொண்டவர்கள் எப்போதும் கௌரவிக்கத் தக்கவர் என்ற கருத்தை காட்டுவதற்காக என்று கொள்க. வெறுத்துக் கூறுவதெல்லாம் ஆற்றாமையின் செயலே என்று கொள்க. “மாமன் மகளே” என்று சொன்னது, ‘திருவாய்ப்பாடியிலே ஒரு அடியவரின் ஸம்பந்தம் தனக்கு மோக்ஷம் கொடுக்க உதவும் என்று ஆண்டாள் ஆசைப்பட்டபடி” என்று உரையாசிரியர் ஆறாயிரப்படி வியாக்கியானத்தில் கூறி உள்ளார்.
“ஊமையோ செவிடோ ‘ என்ற வினாக்களுக்கு உட்கருத்து அடியவர்கள் விஷயத்தில் இரக்கமுற்று ‘ஐயோ !’ என்று ஓரு வார்த்தை சொல்வதற்கு உன் மகளுக்கு முடியாதோ என்றும், அடியவர்களாகிய எங்களுடைய கூக்குரல் அவள் செவியில் விழவில்லையா, அப்படி உன் மகள் உள்ளே செய்யும் காரியம் என்ன என்று கேட்கிறார்கள்.
அனந்தலோ என்று சொன்னதால், கண்ணனோடு நெடு நேரம் கூடிக் களித்துப் படுக்கையில் இப்போது தான் சாய்ந்தனளோ என்று கேட்பது தெரியும்.
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ என்று சொன்னதால், உன் மகளை யாரேனும் உணரவொண்ணாதபடி மந்திரவாதம் செய்து கட்டுப்படுத்தினரோ என்று கேட்பது விளங்கும்.
இவர்கள் இப்படி வினவுவதை கேட்ட தாயார், “பெண்களே, நீங்கள் இவளுக்கு உகந்த எம்பெருமான் திருநாமங்களை வாயார அநுஸந்தித்தீர்களாகில், சடக்கென உணர்ந்து வருவாள்” என்று சொன்னார்.
மாமாயன் என்று சொல்வதற்கு, அபலைகளான பெண்களைத் தன் வசப்படுத்திக் கொள்ளுதற்குச் சாதனமான பல ஆச்சரிய குண சேஷ்டிதங்களை உடையவன் என்பதை பொருளாக கொள்ளலாம்.
மாதவன் என்பதால், இடக்கை வலக்கை அறியாத இடைச்சியர்களை மாத்திரம் வசப்படுத்திக் கொண்டவன் அல்லன் அவன், திருமகளை இறையும் அகலவொண்ணாதபடி மார்பில் அழுத்திக் கொண்டு உள்ளவன் காணுங்கள் என்பதை சொல்வது புரியும்.
வைகுந்தன் என்பதால், இங்குள்ள பெண்களை மாத்திரம் தோற்பிக்க வல்லவன் இல்லை, கண்கள் துஞ்சாமே கண்டபடியே நிற்கும் நித்திய ஸூரிகளை ஒரு நாடாக உடையன் என்பதை தெரிவிக்கும். என்றென்றும் என்று சொல்வதால், இவைகளை போன்ற பல திருநாமங்கள் கூறியது விளங்கும்.
ஸ்வாமி நம்மாழ்வாருக்கு முந்தினவரான திருமழிசைப்பிரானை உணர்த்தும் பாசுரமிது.
- இதில் மாமான் மகளே என்ற விளி ஒருவகையான தேஹ ஸம்பந்தத்தில் நோக்குடையது. ஆண்டாளுக்கும் திருமழிசை யாழ்வார்க்கும் ஒரு வகையான தேஹஸம்பந்தமுண்டு. ஆண்டாள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மி ஆவாள். லக்ஷ்மி (ஆண்டாள்) ப்ருகு குலத்தில் தோன்றியவள். திருமழிசைப்பிரானும் ப்ருகு குலத்தில் தோன்றியவர். இத்தகைய குலஸம்பந்தம் இங்கு நோக்கத்தக்கது.
- ஆழ்வார் ரிஷி குலத்திலே பிறந்து பிரம்பன் குடியிலேயானார் அவர். ஆண்டாள் ப்ராஹமண குலத்திலே பிறந்து கோபாலர் குலத்திலே குடி புகுந்தாள். இதுவும் ஒற்றுமை நயம்.
- தூமணி மாடத்து என்பதைப் பார்ப்போம். சிறந்த மாணிக்கக் குப்பியின் உள்ளே உள்ளது வெளியில் நிழலிட்டுத் தோன்றும். திருமழிசைப்பிரான் “உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று வேண்டிட, உள்ளிருந்த திருமால் அப்படியே வெளியிற் பொசிந்து காட்சி தந்தமையால், இந்த ஆழ்வார், தூமணிமாடம் என்று சொல்ல தகுதியுடையார்.
- சுற்றும் விளக்கெரிய என்பதைப் பார்ப்போம். விளக்காவது ஞானம் ஆகிய ஓளி. “சாக்கியங் கற்றோஞ் சமணம் கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்,” என்றபடி இவ்வாழ்வார் ஸகல மதங்களிலும் புகுந்து ஞான விளக்கம் பெற்றவர் ஆதலால் ‘சுற்றும் விளக்கெரிதல்’ இவர்க்கு அஸாதாரணம். “யானறிந்தவாறு – ஆரறிவார்” (நான்முகன் திருவந்தாதி 3) என்றும் “என் மதிக்கு விண்ணெல்லாமுண்டோ விலை” (நான்முகன் திருவந்தாதி 51) என்றும் இவரது பாசுரங்களினாலும் இது விளங்கும்.
- தூபம் கமழ என்பதைப் பார்ப்போம். சிறந்த ஞானமிருத்தல் மாத்திரம் பயன்படாது; அது நன்கு பரிமளிக்கவேண்டும். எம்பெருமானையன்றி வேறொரு தெய்வத்தைத் தொழாதிருத்தலே ஞானத்திற்குப் பரிமளம். “மறந்தும் புறந்தொழா மாந்தர்” (நான்முகன் திருவந்தாதி 68) என்பது இவ்வாழ்வாருடைய திருவாக்காகும்.
- துயிலணை மேல் கண்வளரும் என்பதைப் பார்ப்போம். இந்த ஆழ்வாருடைய திருக்கண் செல்வது சயனத்திருக்கோலமான எம்பெருமான்களின் மீது தான். கச்சி வெஃகாவிலும் திருக்குடந்தையிலுமே பெரும்பாலும் இவர் காலம் கழித்தது. சயனத்திருப்பதிகளையே ஒரு கோர்வையாக எடுத்துப் பாசுரம் பாடினவரும் இவ்வாழ்வார்; நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தணையரங்கம் பேர் அன்பில் – நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனவான்” (நான்முகன் திருவந்தாதி 36) என்றது.
- துயிலணை மேல் கண்வளரும் மாமானுடைய மகளே என்பதைப் பார்ப்போம். துயிலணைமேல் கண்வளரும் மாமான் யதோக்தகாரி எம்பெருமான்; அப்பெருமாள் இவ்வாழ்வார் சொற்படி கேட்டவர்; ‘ இனி, துயிலணைமேற் கண்வளரும் மாமான் – ஆராவமுதன்; அப்பெருமாளும் “எழுந்திருந்து பேசுவாழி கேசனே” (திருசந்தவிருத்தம் 61) என்ற இவ்வாழ்வாரது வேண்டுகோளின்படி எழுந்திருந்தவர் என்பது ப்ரஸித்தம்.
- உன் மகள் தான் ஊமையோ என்பதை பார்ப்போம். வாய் திறவாமலே கை கால்கள் அபிநயங்களால் காரியம் செய்வது ஊமைகளின் பணி. இவ்வாழ்வாரும் யாத்திரையின் போது பெரும்புலியூரென்னும் கிராமத்தில் ஒரு வேதியன் வீட்டுவாசல் திண்ணையில் சிறிது பொழுது எழுந்தருளியிருக்க அங்கு வேதமோதிக்கொண்டிருந்த அந்தணர்கள் நீறுபூத்த நெறுப்புப் போலுள்ள ஆழ்வாருடைய மஹிமையைத் தெரிந்துகொள்ளாமல், அவரைக் கீழ்ச்சாதியராக எண்ணி, வேத சொல்வது அவருடைய காதில் படலாகாது என்று கருதி வேதம் ஒதுவதை நிறுத்தி வைக்க, அதனை அறிந்த ஆழ்வார் அவ்விடத்தை விட்டுத் தூரத்திற்கு சென்று வேறோறு வீட்டு மேடையில் வீற்றிருக்கையில் அந்த வேதியர்கள் மீண்டும் வேதம் ஓதத் தொடங்கி, விட்ட வாக்கியம் தோன்றாது மயங்கி நிற்க, ஆழ்வார் அது கண்டு கறுப்பு நெற்களைக் கை நகத்தாலே இடந்துபோட, அப்பொருளுள்ள வேதவாக்கியம் அவர்களுக்கு ஞாபகம் வந்தது. உடனே அவர்கள் ஆழ்வார் மேல் மரியாதை தோன்ற அவரை உபசரித்து வணங்கினார்கள் என்பது சரித்திர வரலாறு. இப்படி வாய் திறவாமலே, செய்கையினால் காட்டினது, ஊமையோ என்றது.
- அனந்தலோ என்றால் தூக்கமோ என்று கொள்ளலாம். கடவுளிடமே மனத்தை நிறுவும் பெரியவர்களுக்கு, தூக்கமாவது வெளிப்புற காட்சிகளில் நெஞ்சு செல்லாது இருக்கப் பெறுதலே ஆகும். “உன்னைத் தெரித்தெழுதி வர்சித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினென் போது” (நான்முகன் திருவந்தாதி 63) என்றும் “தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்தப் பொழுது எனக்கு மற்றதுவே போதும்” (நான்முகன் திருவந்தாதி 85) என்று அருளிச் செய்யும் இவ்வாழ்வார்க்கு இந்த நிலைமையே அனந்தலாகும்.
- இனி, ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ என்பதைப் பார்ப்போம். “பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன், அவன் எனக்கு நேரான்” (நான்முகன் திருவந்தாதி 84) என்னும் படியான திருநா வீறு இவருக்கே உரியது. இது தான் பெருந்துயில், எம்பெருமானை ஓழிந்த மற்றையோரைக் கண் கொண்டு பாராமையில் பெருமை.
- மாமாயன் என்பதைப் பார்ப்போம். “மாயமென்ன மாயமே” (திருச்சந்தவிருத்தம் 40) என்றும், “மாய மாயம் ஆக்கிகனாய் உன் மாய முற்று மாயமே” (திருசந்தவிருத்தம் 41) என்றும் பலகாலும் எம்பெருமானது மா மாயங்களைப் பேசுகிறவர் இவ்வாழ்வார்.
- இப்போது மாதவன் என்றதனை பார்ப்போம். “மாதவனை ஏத்தாதார் ஈனவரே” (நான்முகன் திருவந்தாதி 6) என்றவரும் இவ்வாழ்வாரே, “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” (நான்முகன் திருவந்தாதி 53) என்றதும் காணலாம்.
- இப்போது வைகுந்தன் என்றதனைப் பார்க்கலாம். “வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு” (நான்முகன் திருவந்தாதி 75) என்றவர் இவ்வாழ்வாரே. வைகுந்தனது சேவடிமேல் தாம் பாசுரம் பாடினவராகச் சொல்லிக்கொண்டார். ஆகவே, மாமாயன், மாதவன், வைகுந்தனென்ற திருநாமங்கள் இவ்வாழ்வார்க்குப் பரம போக்யங்கள் என்பது விளங்கும்.
Leave a comment