கொழுப்புடைய செழுங்குருதி கொழித்து இழிந்து * குமிழ்த் தெறிய, பிழக்குடைய அசுரர்களைப் பிணம் படுத்த பெருமானூர், * தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு, * தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே.
பெரியாழ்வார் திருமொழி 4.8.7
பெரிய மலையிடத்தில் வளர்வதால் ஒருவர் இருவரால் தழுவ அரியதாக இருக்கும் சந்தன மரங்களை வேரோடு பிடுங்கி இழுத்துக் கொண்டு, இதனை கொண்டருள வேண்டும் என்று சொல்வதை போல் வருகின்ற காவிரி ஆறு ஆராவாரித்து அவன் திருவடிகளைத் தொழும் சிறப்புடையதாக திருவரங்கம், கொழுப்புடையதாய், செழித்து உள்ள ரத்தமானது ஊற்று மாறாமல் கிளர்ந்து அருவி குதித்தாற்போல் நிலத்தில் விழுந்து குதித்து அலை எறியும்படியாக லோகத்தை வருத்துகிற பிழையை உடைய அசுரர்களை நாசமாக்கிவிட்ட சர்வேஸ்வரன் நித்யவாஸம் செய்கின்ற தேசம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
பன்றி, உடம்பு கொழுக்கும்படி சத்துள்ள பொருட்களை உட்கொண்டு, உடலை வளரச் செய்து திரிகையாலே, கொழுப்பு உடையதாகவும் கிளர்ந்து உள்ள ரத்தம் போல் என்கிறார் .
மலைகளில் வளர்ந்துள்ள மிக பெருத்த சந்தன மரங்களை வேரோடு பிடுங்கி இழுத்துக்கொண்டு, இவற்றை கொண்டருள வேண்டும் என்று இருப்பது போல, காவேரியானது தான் கொண்டு வந்தவைகளை பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பித்து அவன் திருவடிகளைத் தொழதன என்று கூறுகிறார்.
சந்தன மரம் சிறியதாக இருந்தால், ஓருவர் அல்லது இருவரால் தழுவ முடியும், ஆனால், அளவிட்டுக் காட்ட முடியாதபடி மிகவும் பெரியதாக இருப்பதால், தழுவ முடியாமை கூறப்பட்டது.
Leave a comment