வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக்கண்டு, சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம், பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார், ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.
பெரியாழ்வார் திருமொழி 3.10.10
இந்த பாடலில், இந்த பதிகம் கற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறார்.
கச்சோடு கூடினா ஸ்தனங்களை உடையவளாய் மடப்பத்தை உடையவளான பிராட்டியை கண்டு சீர்மை பொருந்திய சக்தியை உடைய திருவடி (அனுமன்) ஆராய்ந்து சொன்ன அடையாளங்களை பூமி எங்கும் பாவின கீர்த்தியை உடைய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான இவற்றை ஓத வல்லவர்கள் எல்லா நன்மைகளும் சேர்ந்த ஸ்ரீ வைகுண்டத்திலே நித்யசூரிக்களோடு இருக்கப் பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சீராரும் திறல் அநுமன் என்று சொன்னது, வானரர்கள் பலர் இருக்கும் போது, ‘இவனே இந்த காரியம் செய்ய வல்லவன் ’ என்று பெருமாள் (ஸ்ரீராமன்) திருவுள்ளம் கொண்டு, அடையாளங்களை சொல்லி, திருவாழியும் கொடுத்து, அனுமன் குணங்களால் பரிபூர்ணனாய், நினைத்த காரியங்களை முடிக்க வல்லவனாக இருப்பதாலும், சத்தியவானாக இருக்கிறதாலும் தான் என்று சொல்கிறார்.
Leave a comment