அண்டத்தமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை, * பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ, * கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து, * பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொலோ.
பெரியாழ்வார் திருமொழி 3.8.7
பரமபத வாசிகளான நித்யசூரிகளுக்கு தலைவனாய் சக்ரபாணியாக இருக்கும் அவன் என்னுடைய பெண்ணை, இப்போது (ரூபத்திலோ, குணத்திலோ) சில குறைகள் சொல்லி, வரிசை கெட ஆளுவனோ ; (அல்லது) முன்னே பட்டம்கட்டி தனக்கு முதல் மணவாட்டியராய் இருப்பவர்கள் முன்னே இவளைக் கொண்டு தன் வீட்டில் செய்ய வேண்டியவைகளை நடத்தி, இடைக்குலத்துக்கு தலைவி என்று தன் மனைவி ஆனதை தோற்ற பட்டம் கட்டி அந்தப்புர காவலிலே வைப்பானோ என்று சந்தேகிப்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உலகத்தில் குற்றமே கண்ணாயிருப்பவர் எப்படிப்பட்ட விஷயங்களிலும் ஏதாவது ஓரு குறையைக் கூறுவது வழக்கம்; அதுபோல் கண்ணனும் என் மகளிடத்து ஏதாவது ஒரு குறையைக் கூறி “இவளை வாசல் பெருக்குகிற தொழிலில் விடுங்கள்” என்று புறத்தொழில்களில் நியமித்து விடுவனோ, அல்லது முன்னமே பட்டம் கட்டிக் கொண்டு அந்தப்புர மஹிக்ஷிகளாய் இருப்பவர்களோடு சேர்த்து இவள் கருத்தின் படி எல்லா காரியங்களையும் நிர்வஹிப்பவனோ என்று சந்தேகிக்கிறாள்.
Leave a comment