வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என் மகளை, * கூடிய கூட்டமேயாகக் கொண்டு குடி வாழுங்கொலோ, * நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து * சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப் பற்றுங் கொலோ.
பெரியாழ்வார் திருமொழி 3.8.6
வேடரையும் மரகுலத்தில் உள்ளாரையும் போல் என் பெண்பிள்ளையை வேண்டினபடி செய்து ஆணும் பெண்ணும் நெஞ்சு பொருந்திக் கூடின கூட்டம் மாத்திரமே மணமாகக் கொண்டு குடி வாழ்க்கை வாழுமோ சகடத்தை முறியும்படி உதைத்த ஸ்வாமியானவன் நாடும் நகரும் அறியும்படியாக நல்லது ஒப்பற்று இருப்பது ஒரு கல்யாணம் செய்து தக்கபடி கையைப் பிடித்து மணம் கொள்ளுமோ என்று தாயார் சந்தேகிப்பது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
நல்ல குலத்தில் பிறந்த என் மகளான இவளைக் கண்ணன் களவு வழியால் கொண்டு போனான் என்றாலும் போன இடத்தில் விவாகம் என்ற மகா உத்ஸவத்தை மட்டுமாவது முறை வழுவாமல் உலக வழக்கபடி செய்தால் ஒருவாறு குறை தீரலாம். இவளை இங்கு இருந்து கொண்டு போகிற போது இடை வழியில் இருவரும் மனம் பொருந்திக் கூடுகையாகிற காந்தர்வ விவாஹம் தன்னையே சாஸ்திரப்படி செய்த விவாகமாக நினைத்து வேறு வகையான விவாஹம் எதுவும் வெளிப்படையாகச் செய்யாமல் இருப்பானோ. அல்லது திருவாய்ப்பாடியில் உள்ளாரையும், அதைச் சேர்ந்த, திருவடமதுரை முதலிய நகரங்களில் உள்ளாரையும் வரவழைத்துப் பலர் அறிய விவாகம் பண்ணிக் கொள்வானோ என்று பேசுகிறார்.
Leave a comment