தம் மாமன் நந்தகோபாலன் தழீஇக் கொண்டு என் மகள் தன்னை, * செம் மாந்திரே என்று சொல்லிச் செழுங் கயற்கண்ணும் செவ் வாயும், * கொம்மை முலையும் இடையும் கொழும் பணைத் தோள்களும் கண்டிட்டு, * இம் மகளைப் பெற்ற தாயர் இனித் தரியார் என்னுங் கொலோ.
பெரியாழ்வார் திருமொழி 3.8.5
பெண்பிள்ளை தனக்கு மாமனாரான நந்த கோபர், என் மகளை அணைத்துக் கொண்டு மடியில் வைத்து, நன்றாக இரு என்று சொல்லி, செழுமை தாங்கிய மீன் போன்ற கண்களையும் சிவந்து இருந்துள்ள அதரத்தையும் பருத்த முலைகளையும் இடையையும் செழித்த மூங்கிலை ஒத்த தோள்களையும் தனிதனியாக ஊற்றுப்பார்த்து இப் பெண் பிள்ளையை பெற்ற தாய் இவளை பிரிந்த பின்பு தரித்து இருக்க மாட்டாள் என்று சொல்லுவாரோ என்று சந்தேக்கின்றாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சென்ற பாட்டில், மாமியார் யசோதை சீராட்டுதலை சொல்லிய ஆழ்வார் இந்த பாட்டில் மாமனார் நந்தகோபன் ‘நமக்கு மருமகள்’ என்று ஸ்னேகத்துடன் சீராட்டுதலை சொல்கிறார். என் மகளின் மாமனாரான நந்தகோபர் இவளை அழைத்து முத்தமிட்டு இவளது எல்லா ஸெளந்தர்யங்களையும் கண்டு மகிழ்ந்து “இப்படி அழகில் சிறந்த பெண் பிள்ளையைப் பெற்ற தாய் இவளைப் பிரிந்து உயிர் வாழ்ந்திருப்பது அரிது” என்று அன்புதோற்றச் சொல்வாரோ, இல்லை விருப்பம் இன்றி சிறிதும் மாறுதல் அடையாமல் இருப்பாரோ என சொல்கிறார்.
தழீஇ என்பது தழுவி என்பதாகும்.
Leave a comment