சல மா முகில் பல் கணப் போர்க்களத்துச் சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு, * நலி வானுறக்கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை, * இலை வேய் குரம்பைத் தவமா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய, * கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
நீர் கொண்ட கார்மேகங்கள் பல, யுத்த பூமியில் அம்பு மழை பெய்தாற் போல் திருவாய்பாடி முழுவதும், இடித்து முழங்கி யுத்தம் செய்து, அங்குள்ள மக்களையும், ஆநிரைகளையும் வருத்தி, (எங்களிடம் இருந்து தப்ப முடியமா என்று கேட்பது போல்) இருந்தபோது, நாராயணனான கண்ணன், (திருக்கையில் எடுத்துக்கொண்டு) அந்த அம்பு மழை போன்ற மேகங்களை எதிர் கொண்டு கேடயம் போல், ஏந்திக் கொண்டு எதிர்த்து வருகிற மேகங்களில் இருந்து எல்லாவற்றையும் காப்பாற்றிய மலை, பர்ணசாலைகளில், வசிக்கின்ற முனிவர்களுக்கும், தவம் செய்பவர்களுக்கும் எதிரே, புலிகளைக் கண்டு அவர்கள் தங்களுடைய கழுத்தை சொரியும் நேரம், அவர்களை கொல்லக் கூடிய வாயையும் சினத்தையும் உடைய புலிகள் அந்த சுகத்திலேயே நின்றுகொண்டே உறங்கும் என்ற தன்மை கொண்ட கோவர்தனம் என்ற குடையே.
Leave a comment