அஞ் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா, நீ பொய்கை புக்கு, * நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும், நான் உயிர் வாழ்ந்து இருந்தேன், * என் செய்ய, என்னை வயிறு மறுக்கினாய், ஏதும் ஒர் அச்சம் இல்லை, * கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம் பூ வண்ணம் கொண்டாய்.
பெரியாழ்வார் திருமொழி 3.3.6
அழகிய தேஜஸை உடைய திருஆழியை உன்னுடைய திருக்கையில் ஏந்திக் கொண்டு இருக்கிற அழகை உடையவனே ! நீ நச்சுப் பொய்கையிலே புகுந்து, விஷத்தை உமிழும் காளிய நாகத்தோடு, போர் செய்த போதும், தாயான நான் உயிர் தரித்து இருந்தேன்; என்னை எதுக்காக வயிறு குழம்பும்படி செய்தாய்; சற்றும் ஒரு பயமும் உனக்கு இல்லை; காயாமலர் போன்ற நிறத்தை உடையவனே, கம்ஸனுடைய மனதிற்கு பிரியமானவற்றையே செய்தாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘கருதுமிடம் பொருது‘ (திருவாய்மொழி 10.6.8) என்று ஆழி அவனிடம் இருக்க, அதனை பற்றி நினையாமல், நீ பொய்கையில் புகுந்தாய் என்கிறார். ‘குரோதத்தினால் மேன்மேலும் விஷத்தை உமிழ்ந்து, காளியன் தன் உடம்பினால் உன்னை கட்ட, அதனை உதறிப்போட்டு அதன் உச்சியில் ஏறி, அதன் வாலை பிடித்துக் கொண்டு நின்று துளைத்து வாயால் இரத்தம் கக்கும்படி ஆடி, அதனுடன் அன்யோனியம் செய்த போது, நான் உயிருடன் இருந்தேன், எதற்காக நீ இப்படி செய்தாய் என்கிறாள். இப்படி சாகச வேலைகள் செய்தாய் உனக்கு தான் தீங்கு நேரும், எனக்கு வயிறு எரியும், லோகம் பொறுக்காது, உனக்கு ஒரு பயமும் இல்லை’ என்கிறாள். ‘உனக்கு ஒரு அபாயம் எப்போது வருவது’ என்று காத்துகொண்டு இருக்கும் கம்ஸன் மனதிற்கு பிடித்த காரியங்கள் செய்கிறாய்; உன் வடிவிற்கு ஒன்றும் நேராமல் பிழைக்க பெற்றெனே என்கிறாள்.
Leave a comment