திவ்ய பிரபந்தம்

Home

2.7.8 சீமாலிகன் அவனோடு

சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய், * சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய், * ஆம் ஆறு அறியும் பிரானே, அணி அரங்கத்தே கிடந்தாய், * ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.7.8

மாலிகன் என்ற பெயரை உடையவனாய் அசுரர்களுக்கு தலைவன் என்று பெயர் எடுத்தவனுடன் நட்பு பாராட்ட கூடிய சாமர்த்தியம் உள்ளவனே; அந்த அசுரன் சாக தக்க வழிகளை நீ யோசித்து சக்கராயுதத்தாலே அவன் தலை அறுத்துப் போட்டவனே, மேல் வருவதை அறியவல்ல என்னுடைய பிரானே, அழகு பொருந்திய திருவரங்க மா நகரில் கண் வளர்ந்து அருளுபவனே, உன் மேல் பரிவை உடையவளான என்னுடைய துக்கத்தை நீக்கினவனே, இருவாட்சி பூவை சூட்ட நீ வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

சாமாறு அவனை நீ எண்ணி என்று சொன்னது, இவனை இனி அழிய செய்யாவிடில் நாட்டிற்கு நல்லது அன்று என்று எண்ணியது, அவன் சாக தக்க வழிகளை நீ எண்ணியது, அதாவது நண்பனை கொன்றான் என்ற கெட்ட பெயர் உனக்கு வராமல் இருக்க எண்ணியது; அதே சமயம் உன்னாலே முடிந்தான் என்ற பெயர் உனக்கு வரும்படியும் எண்ணியது போன்றவை ஆகும்.

Leave a comment